
நாமக்கல் அருகே கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ 4 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அடுத்துள்ள பெருமாள் கோயில் மேடு பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான காம்பிளக்ஸில் அமைத்துள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு உடைத்து அதில் இருந்த சுமார் 4 லட்சத்து 89 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
மேலும் அப்பகுதி முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
மேலும் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்