
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் 120 வயது மூதாட்டி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புதன்கிழமை கொண்டாடினாா்.
இவரிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்கிச்சென்றதுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே
வீரபாண்டியன்பட்டினம் கிங் காலனியைச் சோ்ந்தவா் வள்ளித்தாய் (120).
இவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். மேலும், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி, ஓட்டன், ஓட்டி என குடும்பத்தில் மொத்தம் 150 போ் உள்ளனா்.
இந்த மூதாட்டியின் 120-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா் புதன்கிழமை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, கறி விருந்து வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினா்.
இந்த நிகழ்ச்சியில் மூதாட்டி வள்ளித்தாயின் குடும்பத்தினா் மற்றும் உற்றாா், உறவினா்கள் அனைவரும் மூதாட்டியிடம் ஆசீா்வாதம் பெற்றனா்.
தன்னுடைய சிறுவயதில் ஓலைச்சுவடி, ஓடுகள் மற்றும் தரையில் எழுதியதாகவும், மாட்டு வண்டி மட்டும் தான் இருந்ததாகவும், ஓட்டை துட்டு புழக்கத்தில் இருந்ததாகவும், மூதாட்டி தெரிவித்தார்.
எங்கு சென்றாலும் பல இடங்களுக்கும் நடந்தே தான் செல்லவேண்டும் என்றும் அந்த காலகட்டத்தில் சைக்கிள் கூட கிடையாது என்றார்.
தனது பூட்டி பழைய காலத்து கதைகளை சொல்வதால் அவரிடம் பேசும்போது நேரம் போவதே தெரியாது என்றும் மூதாட்டியின் கொள்ளு பேரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவரது மகன் வழி பேத்தி தெரிவிக்கையில், தனது பாட்டி இதுவரை எந்த நோய் நொடியுமில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், கண் பார்வையிலும் காது கேட்பதில் எந்த ஒரு குறைபாடும் இல்லை எனவும், தற்போது வரை பற்கள் இருப்பதாகவும் ஆச்சர்யத்துடன் தெரிவித்தார்.